வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா?

பிரதமர் மோடிக்கு, மு.க. ஸ்டாலின் கண்டனம்

பிரதமர் மோடி ஒடிசா மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது, ”பூரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவிகள் மாயமாகிவிட்டன – சாவிகள் மாயமான விவகாரத்தில் பிஜூ ஜனதா தளத்திற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது – அந்த சாவிகள் தமிழ்நாட்டிற்கு போய்விட்டதாகக் கூறுகிறார்கள்’’ என்று பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாக திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல’’ என குறிப்பிட்டுள்ளார்.

‘’இதற்கு முன்னர், உத்தரபிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாக தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார்.

மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று அப்போதே தெரிவித்து இருந்தேன் – சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன் – ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார்.

இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகன்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

ஜெகன்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சு இது – ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?” என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘’தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம்.

இதை மக்கள் புரிந்து கொள்வார்கள் – வாக்குக்காக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

– மு.மாடக்கண்ணு

tamilanstamilnaduTN CM MK Stalin Strongly Objects To PM Modiஉத்தரப் பிரதேசம்ஒடிசாதமிழ்நாடுபாஜகபிரதமர் மோடிபிஜூ ஜனதா தளம்பூரி ஜெகன்நாதர் கோயில்மத்தியப் பிரதேசம்மு.க.ஸ்டாலின்ராஜஸ்தான்
Comments (0)
Add Comment