சால்வையை வீசி எறிந்த சம்பவம்: சிவகுமார் விளக்கம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழா, சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சி நிறைவடைய இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது, முதியவர் ஒருவர், சிவகுமாரை சந்தித்து அவருக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அப்போது சிவகுமார் அவரிடமிருந்த சால்வையை பிடுங்கி வீசி எறிந்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் சிவகுமாரை விமர்சித்தனர்.

இந்த நிலையில், காரைக்குடி சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து சிவகுமார் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ள விவரம்:

“காரைக்குடியில் நடந்த சால்வை சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்திருப்பீர்கள். எனக்கு சால்வை அணிக்க வந்தவர் யாரோ எவரோ கிடையாது.
என்னுடைய தம்பி. பெயர் கரீம். 50 ஆண்டுகால நண்பர்.

1971-ம் ஆண்டு மன்னார்குடியில் நடைபெற்ற நாடகத்துக்கு தலைமை தாங்கச் சென்றேன். அப்போது அவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

கரீமின் திருமணத்தையே நான்தான் நடத்தி வைத்தேன். இவருடைய மகள், பேரன் திருமணத்துக்கும் சென்றுள்ளேன்.

விழாக்களில் யாராவது எனக்கு சால்வை அணிவிக்க வந்தால், அதை திருப்பி அவர்களுக்கே போர்த்திவிடுவேன்.

அன்றைக்கு பலரும் பேசிய பின் கடைசியாக நான் பேசினேன். அப்போது 10 மணி ஆகிவிட்டது. மிகவும் சோர்வாக இருந்தேன்.

அப்போது கரீம் அங்கு நின்றிருந்தார். எனக்கு சால்வை போடுவது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நின்றிருந்தார்.

தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்னுடைய தவறுதான். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” இவ்வாறு விளக்கம் அளித்து, தன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிவகுமார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment