ஆபாசப் படம் பார்த்தால் குற்றமா?

சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை ஆஜராகச் சொல்லி அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

அப்போது ஆபாச படங்களைப் பார்த்ததாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை பார்க்கவில்லை என்றும் ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கவுன்சிலிங் செல்ல விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம். 

மேலும், இன்றைய இளைஞர்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல ஆபாசப் படங்களுக்கும் அடிமையாகியுள்ளனர். இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து இதுதொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment