தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்!

இந்தி சினிமாவில் வெற்றிகரமாகப் பயணிக்கும் குறிப்பிடத்தக்க டைரக்டர் அனுராக் காஷ்யப்.

‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.

இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.
ராகுல் பட், சன்னி லியோன் நடித்துள்ள ‘கென்னடி’ படம் இவரது புதிய படைப்பாக உருவாகி உள்ளது.

இந்தப்படம், விரைவில் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. அனுராக், நடிகராகவும் அவதாரம் எடுத்திருப்பது அனைவரும் அறிந்த செய்திதான். தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அனுராக் காஷ்யப் வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

அண்மையில் வெளியான விஜயின் ‘லியோ’ படத்தில் சிறியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அனுராக் காஷ்யப், தமிழில் இயக்குநராகவும் கால் பதிக்க இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தை அனுராக் இயக்க உள்ளார். இசை அமைப்பாளராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த பிரகாஷ்குமார், 2015-ம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இப்போது கமல் பிரகாஷ் இயக்கியுள்ள ‘கிங்ஸ்டன்’ என்று படத்தில் பிரகாஷ்குமார் நடித்து முடித்துள்ளார்.
இது அவருக்கு 25 – வது படம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகும் ‘ரிபெல்’ என்ற படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்தப்படம் முடிந்ததும் அனுராக்குடன் பிரகாஷ்குமார் இணைய உள்ளார்.

  • பாப்பாங்குளம் பாரதி.
Comments (0)
Add Comment