பரவும் டெங்கு காய்ச்சல்: கவனம் தேவை!

மழைக்காலம் என்றாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவ ஆரம்பித்து மருத்துவமனைகளில் கூட்டம் கூடிவிடும்.

தற்போதும் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பரவலாக‍க் காய்ச்சல், திரும்புகிற இடங்களில் எல்லாம் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக‍ப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்திருப்பது தான் யோசிக்க வைக்கிறது.

பரவுகிற காய்ச்சல்களில் வைரஸ் காய்ச்சல் வந்தால் மூன்று அல்லது  நான்கு நாட்களில் சரியாகி விடுகிறது. ரத்தம் பரிசோதிக்கப்பட்டு டெங்கு என்பது நிரூபணமானால் பத்து நாட்களுக்கு மேல் அவதிப்பட வேண்டியிருக்கிறது.

அதோடு ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உடனே தொற்று ஏற்பட்டுப் பரவி விடுவது தான் கொடுமை.

மருந்துக்கடைகளில் ‘ஆன்டிபயாடிக்’ மாத்திரைகளின் விற்பனை அதிகப்பட்டிருப்பதையும், மருத்துவமனைகளிலும், ரத்தப் பரிசோதனை மையங்களிலும் கூடுகிற கூட்டத்தையும் சற்றுக் கவனித்தாலே, டெங்கு மட்டுமில்லாமல், ‘மர்மக் காய்ச்சல்’ என்று வேறு தனிக் காய்ச்சல் ரகத்தையும் சொல்கிறார்கள்.

முன்பு அ.தி.மு.க ஆட்சியிலும் டெங்கு பாதிப்புகள் அதிகப்பட்டு, அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்திருக்கின்றன.

இதைப் பற்றி அண்மையில் புள்ளிவிபரத்தோடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன்.

ஏறத்தாழ 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட போது, தி.மு.க.வின் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இப்படிச் சொன்னார்.

‘’தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களை டெங்குவினால் உயிரிழந்ததாகச் சான்றிதழ் அளிக்க‍க் கூடாது என்று வாய்மொழி உத்திரவிட்டிருக்கிறது மாநில அரசு.

தமிழ்நாட்டில் தற்போது மழை விட்டு விட்டுப் பெய்தபடி இருக்கிறது. புயல் எச்சரிக்கைகள் வேறு நீடித்துக் கொண்டிருக்கையில் டெங்கு மட்டுமல்ல, பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட மழைக்காலத்துத் தொற்று நோய்கள் வரவும், பரவவும் வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளாகி அதனால் நோய்த்தடுப்புச் சக்தி குறைந்த நிலையில் இருக்கும் சராசரிக் குடிமக்கள் இந்த நேரத்தில் மேலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியக் கடமையாகிறது.

Comments (0)
Add Comment