பாகவதருடன் உணவருந்தும் மக்கள் திலகம்!

தமிழகத்தில் கர்நாடக இசையின் முதல்வர்கள் எனக் கருதப்பட்ட மூவருமே தமிழில் பாடல்களை இயற்றவில்லை. ஆகவே கர்நாடக இசைமேடைகளில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத நிலை நிலவியது.

அதற்கு எதிராக உருவான தமிழிசை இயக்கம் பாகவதரின் காலகட்டத்தில் தீவிரம் அடைந்தது. பாகவதர் அவ்வியக்கத்தின் ஆதரவாளராக இருந்தார்.

முதல் தமிழிசை மாநாடு ஆகஸ்ட் 1941-ல் சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடந்தது. அதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் கலந்துகொண்டு பாடினார்.

டிசம்பர் 1941-ல் திருச்சியில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில் எம்.கே.தியாகராஜ பாகவதர் வரவேற்புரை ஆற்றினார்.

“நமது நாடு தமிழ்நாடு. நமது தாய்மொழி தமிழ். நாம் அனைவரும் தமிழர். எனவே நாம் தாய்மொழியில் இசைகேட்க விரும்புகிறோம். இது இயற்கை. இது நம் உரிமை” என்று அவ்வுரையில் குறிப்பிட்டார்.

1943-ல் சென்னையில் நடந்த தமிழிசை மாநாட்டிலும் தமிழிசை இயக்க முன்னோடிகளான தண்டபாணி தேசிகர் முதலியோருடன் எம்.கே.தியாகராஜ பாகவதரும் பாடினார்.

டிசம்பர் 1944-ல் சென்னை தமிழிசைச் சங்கம் அரங்கில் பாகவதர் தமிழில் பாடினார். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

சிறைமீண்டபின் டிசம்பர் 24, 1948-ல் தமிழிசை சங்கத்தில் மீண்டும் பாகவதர் இசைநிகழ்ச்சி நடத்தினார். மறைவது வரை எல்லா ஆண்டும் அவர் தமிழிசைச் சங்கத்தில் பாடியிருக்கிறார்.

குறிப்பு: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாகவதருடன் உணவு அருந்தும் புகைப்படம் இது.

– நன்றி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment