ஒரு பாட்டுக்கு இவ்வளவு நாளா?: கண்ணதாசனைத் திட்டிய வீரப்பா!

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைய தயாரித்துள்ளார் பி.எஸ்.வீரப்பா

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்தவர் பி.எஸ்.வீரப்பா.

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்துள்ள பி.எஸ்.வீரப்பா இவர்களுடன் இணைந்து வில்லனாகவும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவரது தயாரிப்பில் கடந்த 1962-ம் ஆண்டு வெளியான படம் ஆலயமணி.

சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜா தேவி, விஜயகுமாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.

இந்தப் படத்தில் எஸ்.எஸ்.ஆர், சரோஜாதேவியைக் காதலிப்பார். அதேபோல் அவரை வளர்த்து ஆளாக்கிய சிவாஜிக்கும் சரோஜா தேவி மீது காதல் இருக்கும்.

ஒரு கட்டத்தில் நண்பருக்காக எஸ்.எஸ்.ஆர் தனது காதலை தியாகம் செய்து சிவாஜி – சரோஜாதேவி இருவருக்கும் திருமணத்திற்கு வழிவிடுவார்.

ஆனால் சில நாட்கள் கழித்து சிவாஜிக்கு இவர்கள் காதல் விவகாரம் தெரியவர, எஸ்.எஸ்.ஆரை கொலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வார்.

இந்த முயற்சியில் தப்பிக்கும் எஸ்.எஸ்.ஆர், நான் தான் அவரைக் காதலித்தேன், ஆனால் அவர் உங்களைத்தான் காதலித்தார் என்று உண்மையை சொல்லிவிடுவார்.

இதனால் தனது தவறை உணர்ந்த சிவாஜி தனது நண்பனையே கொலை செய்ய துணிந்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்வார்.

ஆனால் அவரை ஒரு மீனவன் காப்பாற்றிவிடுவார். அதன்பிறகு தனது உடல்நிலை சரியான சிவாஜி, தனது சொந்தங்களை மறந்து அந்த குடிசை வீட்டிலேயே தங்கிவிடுவார்.

அப்போது அவர் தனது தவறை உணர்ந்து பாடுவது போல் ஒரு பாட்டு தேவை என்று கண்ணதாசனிடம் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஒரு பாட்டை அவர் எழுதிக் கொடுத்தால் படம் முடிந்துவிடும் என்ற நிலையில், அரசியலில் கண்ணதாசன் அப்போது ஈடுபாட்டுடன் இருந்ததால் இந்தப் பாடலை நினைத்த நேரத்தில் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கோபமான அப்படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பா கண்ணதாசனின் வீட்டுக்கே சென்று, இந்தப் பாடலை எழுதி வாங்கிக்கொண்டு தான் இங்கிருந்து கிளம்புவேன் என்று சொல்லி அமர்ந்துள்ளார்.

அப்போது அரசியல் கூட்டத்தில் பேச போகிறேன். பேசி முடித்ததும் எழும்பூர் கோர்ட்டில் ஒரு கேஸ் இருக்கு, அதை முடிச்சிட்டு வந்து எழுதித் தருகிறேன் என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.

இதைக்கேட்ட பி.எஸ். வீரப்பா என்ன கவிஞரே 20 நாட்கள் அலையவிட்டு ஒரு பாடல் கொடுக்க முடியாத உங்களால், சட்டி சுட்டது கைவிட்டது என்று எழுதிக் கொடுக்கறது விட்டுட்டு என்று கோபமாக பேசியுள்ளார்.

இதைக் கேட்ட கண்ணதாசன் இரவு எட்டரை மணிக்கு பாடல் வரும் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்.

அதன்பிறகு பி.எஸ்.வீரப்பா சொன்ன வார்த்தையும், கண்ணதாசனின் அப்போதைய நிலையும் அவருக்கு மனதிற்கு வந்து வந்து சென்றுள்ளது.

இதை வைத்து அந்த தத்துவப்பாடலை எழுதி முடித்த கண்ணதாசன் உடனடியாக பி.எஸ்.வீரப்பாவிடம் கொடுக்கிறார்.

இதை வாங்கிப் படித்த அவருக்கு பெரிய ஆச்சரியம். அவர் தற்செயலாக சொன்ன சட்டி சுட்டது கைவிட்டது என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே அவர் பாடலை எழுதியிருந்தார்.

அந்த பாடல் தான்  “சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்ற பாடல். இந்தப் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment