‘கட்டில்’ கதையைச் சொன்ன பீ.லெனின்!

படைப்பாக்கம், படத்தொகுப்பு இரண்டுக்காவும் ஆறு முறை தேசிய விருது வெற்றவர் பீ.லெனின். அவர், கதை, திரைக்கதை எழுதிப் படத்தொகுப்பும் செய்துள்ள படம் ‘கட்டில்’. இந்தப் படத்தை இயக்கி, நடித்து, தயாரித்திருப்பவர், நடிகர், இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு.

இந்தப் படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

கேள்வி: எடிட்டர் பீ.லெனின் கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படங்களில் பணியாற்றுவதிலிருந்து விலகியிருந்தார். அவருடன் எப்படி இணைந்தீர்கள்?

இ.வி. கணேஷ்பாபு: அவருடைய அப்பா இயக்குநர் பீம்சிங் தமிழ் சினிமாவில் பொற்காலத்தைப் படைத்த இயக்குநர்களின் முதன்மையானவர். ஆனால், அப்பாவின் புகழைச் சிறிதுகூடப் பயன்படுத்திக்கொள்ளாமல், தன்னுடைய படைப்பாற்றலை மட்டுமே வைத்து தமிழ்த் திரையுலகில் ஒரு ஐகானாக மாறியவர்.

படச்சுருள் காலம், தற்போது டிஜிட்டல் சென்சார் காலம் என இரண்டிலும் அவருடைய ‘எடிட்டிங் டேபிளில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் படத்தொகுப்பு என்பது கதை சொல்லும் கலை என்பதைப் பாமர ரசிகனுக்கும் புரிய வைத்தன. ‘பாரதி’ படத்தில் நடித்ததிலிருந்து அவருடைய நட்பைப் பெற்றேன்.

அப்படிப்பட்டவர், தமிழ் சினிமாவின் கதை வறட்சியையும் காட்சி மொழியை நம்பாத போக்கையும் பார்த்தே விலகியிருந்தார். என்றாலும் மாணவர்களுக்குத் திரைப்படக் கலையை இலவசமாகக் கற்றுக்கொடுத்து வந்தார்.

அவரது படைப்பாளுமையை ஒரு திரைப்பட மாணவனாக, நடிகனாகப் பார்த்து வியந்தவன் நான்.

அவரை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற பேராவலோடு அவரை அணுகினேன்.

அப்போதுதான் தனது குடும்பத்துக்குச் சொந்தமான, பல தலைமுறைகளைக் கடந்து பயணிக்கும் பூர்விகமான மரக் கட்டிலை மையமாக வைத்து அவர் எழுதியிருந்த குடும்பக் கதையை என்னிடம் சொன்னார்.

அது நம் அனைவருடைய கதையாக இருந்தது. கதையைக் கேட்டதும் நெகிழ்ந்து விட்டேன்.

நீங்களே படத்தொகுப்பும் செய்து, பட உருவாக்கம் நெடுகிலும் பங்கேற்க வேண்டும் என்கிற அன்புக் கட்டளையை அவருக்குப் போட்டு, மீண்டும் திரையுலகுக்குள் அவரை அழைத்துக் கொண்டு வந்தேன்.

அவரது பங்களிப்பும் பலமும் ஆசீர்வாதமும் ‘கட்டில்’ படத்துக்குக் கிடைத்தது இந்தப் படத்தை உணர்வுகளின் தொகுப்பாக மாறிவிட்டது.

சந்திப்பு: ஆர்.சி. ஜெயந்தன்

நன்றி: இந்து தமிழ் திசை.

Comments (0)
Add Comment