டப்பாங்குத்து சொல் பிரபலமானது எப்படி?

திண்டுக்கல் லியோனி பேச்சு

பாரதிராஜாவின் ‘தெற்கத்தி பொண்ணு’ படத்தில் நடித்த சங்கர பாண்டி  நாயகனாக நடித்திருக்கும் ‘டப்பாங்குத்து’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், நாட்டுப்புறக் கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கதை, திரைக்கதை, வசனத்தை எஸ்.டி. குணசேகரன் எழுத, கிராமிய கலையின் நுட்பத்தை ஆய்வு செய்துள்ள ஆர். முத்து வீரா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இதில், சங்கர பாண்டிக்கு ஜோடிகளாக தீப்தி, துர்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தெருக்கூத்துக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் முத்து வீரா, ”தமிழின் தொன்மையான இசை வடிவங்களான தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என பல வகை உண்டு.

இவை அனைத்தையும் ஒலிப்பதிவு நாடாக வெளியிட்ட நிறுவனம் ராம்ஜி கேசட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் வெளியிட்ட நூற்றுக்கணக்கான பாடல்களிலிருந்து 15 பாடல்களை தேர்வு செய்து அதனை இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

திண்டுக்கல் ஐ. லியோனி பேசும்போது, ”இன்று இந்த அளவிற்கு புகழ் பெற்று உங்கள் முன் நிற்பதற்கு அடித்தளமிட்டவர் மதுரை ராம்ஜி கேசட் நிறுவனத்தின் ஜெகநாதன்தான்.

வத்தலகுண்டு பகுதியில்தான் என்னுடைய பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பேராவூரணி என்ற ஊரில் நீலகண்ட விநாயகர் ஆலய திருவிழாவில் என்னுடைய பட்டிமன்ற பேச்சை ஒருங்கிணைத்திருந்தார்கள்.

அப்போது லியோனி என்றால் யார்? என்றே யாருக்கும் தெரியாது.

அந்த நிகழ்ச்சிக்கு தொடக்கத்தில் ஆறு பேர் மட்டுமே பார்வையாளராக இருந்தனர். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு சிறந்த பாடலுக்கு பொருத்தமானவர் கண்ணதாசனா? பட்டுக்கோட்டையாரா?.

நான் அந்த பட்டிமன்றத்தில் பேசி, பாடிக்கொண்டிருந்த போது… ஊர் முழுக்க மைக் செட் கட்டி இருந்ததால் அரை மணி நேரத்தில் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவிட்டனர்.

மணிராஜ் என்பவர் ஆலங்குடி கேசட்ஸ் என்ற பெயரில் என்னுடைய பட்டிமன்றத்தை பாதியில் பதிவு செய்து வெளியிட்டார். அதன் மூலமாகத்தான் என்னுடைய குரல் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.

இந்தத் தருணத்தில் அதிகாரப்பூர்வமான முறையில் ஒரு பட்டிமன்றத்திற்கு தலைப்பு வைத்து, அதில் என்னையும் என்னுடைய குழுவினரையும் பேச வைத்து, அதை பதிவு செய்து, உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் ராம்ஜி கேசட்ஸ் நிறுவனத்தினர்.

அதன் பிறகு ஏறக்குறைய 15 தலைப்புகளில் பேச வைத்து உலகம் முழுவதும் இன்று வரை என் புகழை பரப்புரை செய்கிறார்கள் மதுரை ராம்ஜி கேசட்ஸ் நிறுவனம்.

அந்த நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘டப்பாங்குத்து’. டப்பாங்குத்து என்ற சொல் எப்படி பிரபலமானது என்றால், நரிக்குறவர் இன மக்கள் தங்களது கழுத்தில் டால்டா டப்பாக்களை அணிந்து கொண்டு அதில் தாளம் போட்டு பாட்டு பாடுபவர்கள்.

இதை பார்த்த இரண்டு முதல்வர்களான எம்ஜிஆர் – ஜெயலலிதாவும் தங்களது கழுத்தில் அணிந்து, ஒரு திரைப்படத்தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க..’ என பாட்டு பாடி பிரபலப்படுத்தினார்கள்.

தெருக்கூத்து என்ற ஒரு கலையை மையப்படுத்தி வெளியாக இருக்கும் முதல் திரைப்படம் இந்த ‘டப்பாங்குத்து’.

தெருக்கூத்து என்பது ஒரு இருபது அடிக்குள் தான் இருக்கும். இங்கு ஒரு குழு, அங்கு ஒரு குழு, ஓடி ஓடி ஆடும்.

இந்த தெருக்கூத்தில் ஆடும் கலைஞர்கள் இந்தப் பாட்டுதான் என்றெல்லாம் அனைத்து வகையான பாடல்களும் பாடுவார்கள். மக்களை 10 முதல் 11 மணி நேரம் வரை சிரிக்க வைப்பதற்கு தெருக்கூத்து கலைஞர்களால் மட்டுமே இயலும் ” என்றார்

Comments (0)
Add Comment