1947-ன் வடுக்கள்: பாடங்களாக மாறும் கதைகள்!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எத்தனையோ வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ராஜிவ் சுக்லா எழுதியிருக்கும் இந்த நூல் அவற்றுள் ஒன்று அல்ல.

ஆனால், அந்த நூல்களைவிடவும் இது தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. சில நபர்களின் தனிப்பட்ட அனுபவங்களைப் பின்புலமாகக் கொண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஆராய்கிறது இந்த நூல்.

இதிலிருக்கும் மன்மோகன் சிங் குறித்த ஒரு சிறிய கட்டுரை அவரைப்பற்றி அளப்பரிய மரியாதையை உருவாக்குகிறது.

அப்பாவின் மளிகைக் கடையில் வேலை செய்து கொண்டே படித்த மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக உயர்வதற்கு இடையில் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருக்கிறார் என்பது மிக சுருக்கமாக இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நினைவு தெரியாத சிறுவயதிலேயே  அம்மாவை இழந்த அவரை அவரது தாத்தா, பாட்டிதான் வளர்க்கிறார்கள்.

நாட்டுப் பிரிவினையின்போது மூர்க்கமான மதவெறி வன்முறைக்கு அவரது தாத்தா பலியாகிறார்.

மன்மோகன் சிங்கின் அத்தையும் அவருடைய அம்மாவும் மதவெறி வன்முறைக் கும்பலிடமிருந்து தங்களது கற்பைக் காத்துக்கொள்ள தீக்குளித்துத் தம்மை மாய்த்துக் கொள்கிறார்கள்.

அவரது அப்பா பாகிஸ்தானில் இருந்த தொழிலையும், சொத்துக்களையும்  இழந்து நிர்க்கதியாக இந்தியா திரும்பி மளிகைக் கடை ஆரம்பித்து எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதைப் படிக்கும்போது மனம் கசிகிறது.

வறுமையும் துயரமும் அலைக்கழித்த குடும்பப் பின்னணியில் கல்வி ஒன்றே மன்மோகன் சிங்கைக் காப்பாற்றி கரைசேர்த்து இருக்கிறது.

மன்மோகன் சிங்கின் திறமையை உணர்ந்த அவரது ஆசிரியர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு மேல் படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு ஊக்குவித்து அவர் அங்கே சேர்வதற்குக் காரணமாக அமைகிறார். 

அங்கு படிக்கும் போதும் அப்பாவிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யக்கூடாது என பல முறை அவர் பட்டினியாகவே இருந்திருக்கிறார்.

இந்த நூலில் ஜின்னா பற்றி எழுதப்பட்டிருக்கும் கட்டுரையும் ஜின்னா மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.

பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவு இன்றைய பாகிஸ்தானின் ஆட்சியாளர்களால் எப்படி சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணரும் போது, நேருவின் லட்சியங்களையும் இன்று இந்தியாவில் அவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் கதியையும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது கொண்டாடப்படும் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த நூல் தமிழ் உட்பட இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

புல்புல் பறவைகளில் ஏறி பறந்தவரைப் பற்றியும், முதலைக்குட்டியைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுசென்ற சிறுவனைப் பற்றியும் படித்து திகைத்துப் போயிருக்கும் மாணவர்கள் இந்த நூலில் உள்ள கதைகளைத் தெரிந்துகொண்டால் சுயநினைவு பெறுவார்கள்.

– துரை.ரவிக்குமார், எம்.பி

Comments (0)
Add Comment