மீண்டும் மிரட்ட வருகிறான் ‘ராட்சசன்’!

ராட்சசன் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ராட்சசன்-2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் முண்டாசுப்பட்டி திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க நகைச்சுவை வடிவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்து.

இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி, 2018-ல் மீண்டும் ஒன்றிணைந்து ராட்சசன் திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டது. த்ரில்லர் கதைக்களத்தில் அமைந்த ராட்சசன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது. இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

ராட்சசன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த கூட்டணியில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்த்த நிலையில், சில பிரச்சனைகளால் அது கைவிட்டுப் போனது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால்-ராம் குமார் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர். விஷ்ணு விஷாலின் 21-வது படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விருமன், மாவீரன் படங்களில் நடித்த நடிகை அதிதி சங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. நடிகர் முனீஸ்காந்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றோடு ராட்சசன் வெளியாகிய ஐந்து ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் படத்தின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ராட்சசன்-2 திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளதாகவும் எதிர்பார்த்ததை விட விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படம், அதனைத் தொடர்ந்து ராட்சசன் இரண்டாவது பாகம் என இந்தக் கூட்டணியை நான்காவது முறையாக இணைய உள்ளதும் முதல் கட்டமாக உறுதியாகியுள்ளது. ராட்சசன்-2 படத்தின் தகவல் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment