விவசாயியைத் தாக்கிய ஊராட்சி மன்றச் செயலர் மீது வழக்கு!

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளததில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி அம்மையப்பர் என்பவர் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி 4 மாதம் ஆகிவிட்டது. ஏன் மீண்டும் அவர் இங்கு வந்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்றச் செயலாளர் தங்கபாண்டியன், விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்தார்.

அதோடு ஊராட்சி செயலாளருக்கு ஆதரவாக மற்றொருவரும் அவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இதில் காயமடைந்த அம்மையப்பன் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடும் அமளி காரணமாக கிராம சபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில், ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, பிள்ளையார்குளம் ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மீனாட்சி உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment