காமெடியில் கலக்கிய ‘தேன் மழை’!

1966 ஆம் ஆண்டு முக்தா சீனிவானின் இயக்கத்தில் வெளியான படம் ‘தேன் மழை’. ஜெமினி, கே.ஆர்.விஜயா போன்றோர் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் தனிச்சிறப்பே இதில் வரும் காமெடி டிராக் தான்.

இந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் ‘சோ’.

நாகேஷ், சோ, மனோரமா மூன்று பேரும் சேர்ந்து காமடியில் அதகளம் பண்ணியிருப்பார்கள்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்தபோதே, அங்கிருந்தவர்கள் எல்லாம் செமையாய்ச் சிரித்து ரசிக்க, இயக்குநரான முக்தா சீனிவாசன்- காமெடி டிராக்கை நீட்டிக்கச் சொல்லி சோ-விடம் சொல்லியிருக்கிறார்.

படத்தில் – ஒரு காட்சியில் நாகேஷூம், சோவும் சேர்ந்து ஒரு பெண்ணை இன்டர்வ்யூ பண்ணுவார்கள்.

“நீங்க சண்டை அடிக்கடி போடுவீங்களா?’’

“ஏன்.. அப்படிக் கேக்கிறீங்க?’’- வந்த பெண் கேட்பார்.

“இல்லை.. நாரதர் கொண்டை போட்டிருக்கீங்களே.. அதனால் தான் கேட்டேன்’’

“சரி.. உங்களுக்கு எத்தனை வயசு?’’ – என்று கேட்டதும் அந்தப் பெண் “18’’ என்று தன் வயதைச் சொல்லும் போது, சோ குறுக்கே புகுந்து கேட்பார்,

“எத்தனை வருஷமா?’’

சோவும், நாகேஷூம் சேர்ந்து நடித்த பல படங்களில் காமெடி சென்ஸ் குறிப்பிடும்படி இருக்கும் என்றாலும், இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படி இருப்பது சிறப்பு.

Comments (0)
Add Comment