எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: ஈடு செய்ய முடியாத இழப்பு!

இந்தியாவில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு துறைகளில் மேம்பாடு பெறுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் இந்திய வேளாண் துறை மிகவும் பின்தங்கி இருந்தது.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. குறிப்பாக, 1960 முதல் 1980 வரையிலான கால கட்டங்களில் இந்தியாவின் உணவுத்தேவைக்கு அண்டை நாடுகளிடம் கையேந்தக் கூடிய நிலையை மாற்ற வேண்டும் என திட்டமிடப்பட்டது.

உணவுத் தேவையில் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப் புரட்சி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. 

அப்போது மத்திய அரசு ஒவ்வொரு  ஐந்தாண்டு கால கட்டத்திலும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியபோது உணவுத் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப்புரட்சி என்ற இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது.

அதனடிப்படையில் உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில் பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட்டது. அதனை முன்னெடுத்துச் சென்றவர் தமிழகத்தை சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

அவர் அந்தப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமும், அறக்கட்டளை மூலமாகவும், வேளாண்துறைக்கு பெரும் பங்காற்றினார்.

சர்வதேச நெல் ஆராய்ச்சி இயக்குனராக இருந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி பவுண்டேசன் மூலம் தொடர்ந்து தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதனின் சொந்த ஊர் கும்பகோணம். 1925-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ம் தேதி பிறந்தார். சென்னை பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் விவசாயத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றவர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பைத் தொடர்ந்தார். 1960, 70-களில் இந்தியாவில் நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்களிப்புகள் பலராலும் பாராட்டப்பட்டது.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பணியாற்றி உள்ளார். அவரது பணியை மெச்சத்தக்க வகையில் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.

வளரும் நாடுகளில் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பணிக்காக உலக உணவு விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதுதவிர உலகின் நுற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

இந்திய விஞ்ஞானிகளில் இந்த அளவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற ஒரே பிரபலம் எம்.எஸ்.சுவாமிநாதன் என்று குறிப்பிடத்தக்கது.

1972 முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக இருந்த எம்.எஸ்.சுவாமிநாதன், 1980-ல் இந்திய வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும் இருந்தார்.

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் 1982 முதல் 1988 வரை பணியாற்றினார். உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம், கிராமப்புற மேம்பாடு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வேளாண் ஆராய்ச்சிக்காக எம்.எஸ்.சுவாமிநாதன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு கடைசி வரை சேவையாற்றி வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார்.

அவரது உடல் தேனாம்பேட்டை வீனஸ் தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. 

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் செய்த பணி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது.

நம் தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

வேளாண்துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.எஸ்.சுவாமிநாதன் மிக நெருக்கடியான கால கட்டங்களில் விவசாயத்துறைக்கு பெரும் பங்காற்றியவர்” என புகழாரம் சூட்டியுள்ளார். 

இதேபோல் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் குறித்த  பழைய நினைவலைகள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பசிப்பிணி ஒழிப்பு – உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் திரு. சுவாமிநாதன் பல்வேறு சிறப்புக்களுக்குரியவர்.

இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகள் என உலகப் புகழ்பெற்ற “டைம்” இதழ் வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்தியர் ஆவார்.

நாடு போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் – வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் அவர்கள் 1989-91, 1996-2000 ஆகிய ஆண்டுகளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவிலும் இடம்பெற்று சீரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

கலைஞர் உடனும், என்னுடனும் எப்போதும் நல்ல நட்பைப் பேணி வந்தார். அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.

மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment