அரசுப் பள்ளிகளில் எமிஸ் நடைமுறையை தடை செய்க!

– அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி கோரிக்கை

மாணவர் கற்றலில் கொரோனா கால இடைவெளியை நிரப்பக் கொண்டு வந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் ஆசிரியர்கள்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை செய்ய விடாமல் தமழ்நாடு அரசு கல்வித்துறை எமிஸ் (EMIS) நடைமுறையை புகுத்தி உள்ளது.

இதில் கல்வி மற்றும் மாணவர்கள் சார்ந்த பல பதிவேற்றங்களை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இதனால் தங்கள் 99% நேரத்தை அலைபேசிகளுடனேயே, எமிஸ் செயலியைப் பயன்படுத்துவதிலேயே, ஆசிரியர்கள் கழிக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலை.

வகுப்பறைகளில் மாணவர்களுடன் உரையாடி அன்பு செலுத்தி கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டு நல்லதொரு கல்வியை வழங்க வேண்டிய ஆசிரியர்களை அதன் எதிர் திசையில் பயணிக்கத் தூண்டுகிறது கல்வித்துறை.

இதனால் தங்கள் வசம் உள்ள மாணவர் நலன் குறித்து எந்த அக்கறையும் காட்ட இயலவில்லை என்று மனம் வெதும்புகிறார்கள் ஆசிரியர்கள்.

இந்த எமிஸ் நடைமுறையால் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஆசிரியை திருமதி அன்னாள் ஜெயமேரி இணையவழியில் பதிவேற்றம் செய்வதில் இருந்த சிக்கலால் ஏற்பட்ட மன உளைச்சலில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்த நிர்ப்பந்திக்கிறது.

எண்ணும் எழுத்தும் திட்டக் கற்பித்தல் அரும்பு, மொட்டு, மலர் என்ற வகைகளில் கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து குழந்தைகளது திறனை சோதிக்க வலியுறுத்தி கட்டாயப்படுத்துகிறது.

இதற்கு எமிஸ் (EMIS) செயலி பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிடுகின்றனர் கல்வி துறையின் இந்த நடைமுறைகள் யாவும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமேயாகும்.

ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கின்ற நிலையில் வகுப்பறைகள் இல்லாத சூழ்நிலையில் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேர்வு முறைகளை இணையவழியில் நடத்தியே தீர்வோம் என்று கட்டாயப்படுத்துவது முறையற்றது.

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பங்கும் பகுதியுமான இந்த இணையவழிக் கல்வி மற்றும் தேர்வு முறையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் (AISEC) தமிழ்நாடு கிளை.

தமிழக அரசாங்கம் இந்த இணைய வழி தேர்வு முறையை திரும்பப்  பெறுவதோடு எமிஸ் நடைமுறைக்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி ஆசிரியர் சங்கங்களும் பெற்றோர்களும் பரந்துபட்ட பொது மக்களும் போராட முன்வருமாறு ஏஐஎஸ்இசி அறைகூவி அழைக்கிறது.

Comments (0)
Add Comment