நடப்பாண்டில் நிகர நேரடி வரி வருவாய் 7 லட்சம் கோடி!

– ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல்

நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் பாதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிகர நேரடி வரி வருவாய் 23.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒன்றியஅரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது.

இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிமாற்ற வரி உள்ளிட்டவை அடங்கும்.

நேரடி வசூல் தொடர்பான விவரங்களை ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சகம் அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கடந்த 16-ம் தேதி வரையிலான நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடியாக உள்ளது என்றும்

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 23.51 சதவீத அதிகம் என்றும் நேரடி வரி வசூலுக்கான முழு ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ.18.23 லட்சம் கோடி என்றும் அதில் 47.45 சதவீதம் தற்போது எட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

நேரடி வரி வசூல் உயர்வுக்கு, நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருப்பதுதான் காரணம் என்றும் தற்போதைய நேரடி வரி வசூலில் நிறுவனங்களுக்கான வருமான வரி ரூ.4.16 லட்சம் கோடியும்,

பத்திர பரிவர்த்தனை வரி உள்ளிட்ட தனிநபர் வருமான வரி ரூ.4.47 லட்சம் கோடியும் அடங்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு, கடந்த 16-ம் தேதி வரை ரூ.1.22 லட்சம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment