மக்கள் திலகத்தை மனதார வாழ்த்திய அன்னை தெரசா!

“அன்னை தெரசா” மலர்ந்த முகத்தோடு இந்த பெயரைச் சொன்னார் எம்.ஜி.ஆர். அது 1984.

கொடைக்கானலில் பெண்களுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

என்ன பெயர் வைப்பது அந்தப் பல்கலைக் கழகத்துக்கு? எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.

அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார். அடுக்கடுக்காக பெயர்களை எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஔவையார் பெயர் வைக்கலாம் என ஒரு சிலர் சொல்ல, சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல,
இன்னும் சிலர் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்து சொன்ன பெயர்…

அன்னை தெரசா!

எம்.ஜி.ஆரை சுற்றியிருந்த அதிகாரிகள் அனைவரும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனெனில் அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயர் இல்லை.

எம்.ஜி.ஆரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த பெயர்தான் அன்னை தெரசா!

இப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

Mother Teresa Women’s University!

விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்!

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க…

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.

இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது:

“நான் கைலி கட்டாத முஸ்லிம்,
சிலுவை அணியாத கிறிஸ்துவன்,
திருநீறு அணியாத இந்து.”

அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதை அறிந்த அன்னை தெரசா, அந்த விழா மேடையிலேயே எம்.ஜி.ஆரை மகிழ்ச்சியோடு வாழ்த்தி, மனநிறைவோடு ஆசி வழங்கினார்.

மத வெறியை ஒழிப்போம்.
மனித நேயம் காப்போம்.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment