69-வது தேசிய விருது: புறக்கணிக்கப்பட்ட தமிழ் சினிமா!

ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதில் கடந்த ஆண்டு நிறைய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு சொற்ப அளவிலே விருதுகள் கிடைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கருத்துக்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக ஜெய்பீம் படத்துக்கு முறையான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று திரைப் பிரபலங்கள் உள்பட பலரும் வேதனை தெரிவித்து வருவது பற்றிய சிறப்புத் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில் 69-வது தேசிய திரைப்பட விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்த முறை 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2021-ம்‌ ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகவும் கடுமையாக போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வந்தவுடன் பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது.

மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி என்ற பிரிவில் தேசிய விருது வென்றது.

இப்படத்தில் சிறப்பாக நடித்த மறைந்த நல்லாண்டிக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. ‘இரவின் நிழல்’ படத்தில் இடம் பெற்ற ‘மாயவா தூயவா’ என்ற பாடலைப் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணிப் பாடகி விருதும் அறிவிக்கப்பட்டது.

இ.வி.கணேஷ் பாபு இயக்கிய ‘கருவறை’ என்ற குறும்படத்திற்கு இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது.

அதேபோல் லெனின் பாரதி இயக்கியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் என்ற ஆவண படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நிறைய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு சொற்ப அளவிலே விருதுகள் கிடைத்துள்ளன. அதிலும் கடைசி விவசாயி படம் மட்டுமே இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

இரவின் நிழல் படத்துக்கு விருது கிடைத்தாலும், அது ஸ்ரேயா கோஷலுக்கு என்பதால் ரசிகர்கள் அதனை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, சமூகத்துக்கு அழுத்தமான படைப்பை வழங்கிய சூர்யாவின் ஜெய்பீம், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் விருது பெறவில்லை. இது ரசிகர்கள் உள்பட பிரபலங்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

குறிப்பாக ஜெய்பீம் படத்துக்கு முறையான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று இணையவாசிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

ஜெய்பீம் படத்துக்கு விருது இல்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளிப்பில் இருக்க, மறுபக்கம் திரையுலகமே ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாகவும் அதற்கு தேசிய விருது அறிவிக்கப்படாததற்கு தங்களது வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகர் நானி தொடங்கி, பி.சி. ஸ்ரீராம், இயக்குநர் சுசீந்திரன் உள்பட தென்னிந்திய திரையுலகமே ஜெய்பீம் பக்கம் திரும்பி உள்ளது‌.

தேசிய விருதுக்கு இந்த ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் போன்ற படங்கள் தகுதியானவையா? இல்லையா? என்று இணையத்தில் கணக்கெடுப்பு நடத்தி வந்ததையும் பார்க்க முடிந்தது.

ஆகமொத்தம் தமிழ் திரையுலகிற்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் விருது வென்ற கலைஞர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment