தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!

முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சைக்கிளிங், செயிலிங், பளுதூக்குதல் மற்றும் கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்குபெற்று வரும் 6 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30.50 இலட்சம் மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை சென்னை முகாம் அலுவலகத்தில் வழங்கினார்.

சைக்கிளிங் வீராங்கனை செல்வி எம். பூஜா சுவேதாவிற்கு கார்பன் பிரேம் மற்றும் கார்பன் சக்கரங்களை வாங்குவதற்காக ரூ.12,30,000/-ம், ராயல் மெட்ராஸ் யாட் கிளப்பிற்கு தேசிய செயிலிங் போட்டிகளுக்காக ரூ.5,00,000/-ம் வழங்கப்பட்டது.

மேலும், உத்தரபிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகளில் சீனியர், ஜூனியர் மற்றும் யூத் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் எல். தனுஷ், வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் வி. கிஷோர் ஆகியோருக்கு தலா ரூ.50,000/- வீதம் பரிசுத்தொகை கொடுக்கப்பட்டது.

சைக்கிளிங் வீராங்கனை கௌரி மிஷ்ராவிற்கு சர்வதேச சைக்கிளிங் போட்டிகளில் பங்குபெறுவதற்காக ரூ.10,00,000/-ம், கராத்தே வீரர் எஸ். சாய் பிரஜன் சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெறுவதற்காக ரூ.2,20,000/- என மொத்தம் ரூ.30.50 இலட்சம் மதிப்பிலான நிதியுதவிக்கான காசோலைகளை டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

Comments (0)
Add Comment