நீட் தடுப்புச் சுவர் உடையும் காலம் தூரத்தில் இல்லை!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் முடிவடைந்த பிறகு, இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கோரிக்கையல்ல, அது கல்விக் கோரிக்கை. அதிலும் குறிப்பாக, சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை. இது திமுகவின் கோரிக்கை மட்டுமல்ல. அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் இன்று மாறி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தது சிலர்தான், ஆனால் இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள்.

அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கெடுக்கும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்ற உறுதியை அளிப்பதாகக் கூறியுள்ள அவர், புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரியலூர் அனிதா தொடங்கி – குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்களின் உயிரைக் குடித்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது எனவும், நாடாளுமன்றத்திலும் – சட்டமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் போராடி, அமைய இருக்கும் புதிய மத்திய ஆட்சியின் மூலமாக வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வைப்போம் எனவும், நீட் தடுப்புச் சுவர் உடைப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment