புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு மனித அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில் 200 நாட்களுக்கு மேலாகியும் யார் கழிவுகளைக் கலந்தார்கள் என்பதைக் கண்டறிய முடியாமல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அதே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி மாணவியின் குடிநீரில் சிறுநீர் கலந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், தான் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்த சில நிமிடங்களில் அவருக்கு குமட்டல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவி குடித்த தண்ணீரை எடுத்துப் பார்த்தபோது அதில் சிறுநீர் கலந்திருப்பது தெரிய வந்தது.

உடனே சக மாணவர்களிடம் விசாரித்தபோது இரண்டு மாணவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அதன்பிற்கு அவர்கள் இருவருடைய பெற்றோர்களையும் அழைத்து நடந்த சம்பவம் குறித்து விளக்கிய பள்ளி நிர்வாகம், அந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து வேறு பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மீண்டும் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment