மருதுவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு வரி!

உலகின் சிறந்த ஆயுதம் சொல் என்கிறது ஒரு ஜென் தத்துவம். எங்கோ கேட்ட, யாரோ உதிர்க்கிற ஒரு சொல்லோ ஒரு வரியோ கேட்போரின் வாழ்க்கையை மாற்றிவிடும். வாழ்க்கை முழுக்க வழிநடத்தும்.

அப்படி உங்கள் வாழ்வை மாற்றிய வரி எது? என்ற கேள்விக்கு ஓவியர் டிராட்ஸ்கி மருது, தன் வாழ்க்கையை மாற்றிய வரியைப் பகிர்ந்துகொள்கிறார்.

“என் தந்தை மருதப்பன் டிராட்ஸ்கியவாதி. ‘டிராட்ஸ்கியிசம்’ என்பது கம்யூனிசத்தின் ஒரு கொள்கை நிலைப்பாடு. அதன் மீதுள்ள பிடிப்பால்தான் எனக்கு ‘டிராட்ஸ்கி மருது’ என்று பெயர் வைத்தார் அப்பா.

தொடக்கத்தில் தீவிர காந்தியவாதியாக இருந்தார். 14 வயதிலேயே காந்தியைச் சந்திக்க வார்தா ஆசிரமத்துக்குச் சென்று, அங்கேயே ஓராண்டு தங்கியிருந்தார்.

அங்கிருந்த யாரோ ஒருவர், ‘வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளை’ என்று அறிந்து திரும்பவும் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

1940-களில் இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, மார்க்சிஸ்ட் லங்கா கட்சித் தலைவர்கள் கொல்வின் ஆர் டிசில்வா, என்.எம்.பெரேரா ஆகியோர் தமிழகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்து மதுரையில் தங்கியிருந்தார்கள்.

அவர்களோடு ஏற்பட்ட தொடர்பும் நட்பும் அப்பாவை டிராட்ஸ்கியவாதியாக மாற்றியது.

வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருக்கும். அப்பாவுக்கு ஓவியக்கலை மீதும், சிற்பக் கலை மீதும் தெளிவான அறிவும் ஈடுபாடும் இருந்தது. நிறைய வாசிப்பார். ரசிப்பார். வீட்டையே ஒரு கலைக்கூடம் போல வைத்திருந்தார்.

வரவேற்பரையில் பிரமாண்டமான சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். வாசலில், ஹெரால்டு காப்பியிங் வரைந்த, ஐந்து கண்டத்துக் குழந்தைகளையும் வாரி அணைத்தபடியான இயேசுவியின் ஓவியம் இருக்கும்.

இப்படியான சூழலில் பிறந்ததாலோ என்னவோ, பள்ளிக் காலத்திலேயே வரைய ஆரம்பித்து விட்டேன். என் ஆர்வத்தைக் கண்ட அப்பா, சுயமாக வரைகலை நுட்பத்தைப் புரிந்துகொண்டு பயிற்சி பெறும் வகையில், நிறையப் புத்தகங்களை வாங்கித் தந்தார்.

ஹென்றி ஹெய்சரின் ‘How to draw and paint’ புத்தகத்தில்தான் அந்த வரி இருந்தது.

எல்லாத் தருணங்களிலும் வரைந்து கொண்டே இரு’ என்ற நேரடிப் பொருளைத்தான் நான் அதில் கண்டேன்.

ஆனால், அப்பா எனக்கு அந்த வரியை வாசித்துக் காண்பித்து, “இதுதான் உனக்கான மந்திரம்” என்று சொன்னார்.

“காலம் உனக்காகக் காத்திருக்காது. இதுதான் உன் எதிர்காலம் என்று முடிவெடுத்து விட்டால் ஒரு துளி நேரத்தைக் கூட வீணாக்காதே… உழைத்துக்கொண்டே இரு!” என்றார் அப்பா.

காலப்போக்கில், அவர் சொன்ன பொருள் எனக்கு விளங்கியது.” என்கிறார் நெகிழ்ச்சியாக.

– நன்றி விகடன்

Comments (0)
Add Comment