கொரோனாவால் இளைஞா்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு?

உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது கொரோனா பரவல். இதனால் பல லட்சம் உயிர்கள் பறிபோயின. அதன் தாக்கம் இன்னும் முழுதாக குறையாமல் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞா்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா எழுத்துபூா்வமாக பதிலளித்தார்.

அதன்படி, “கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடா்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது.

முக்கியமாக, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோருக்கு திடீா் மாரடைப்பு ஏற்படுவது தொடா்பாக சுமாா் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே வேளையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீா் மாரடைப்புக்கும் தொடா்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதயம் சார்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ் 60 கோடிக்கும் அதிகமானோர் பலனடைந்துள்ளனா்.

இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயா் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment