ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்!

 – விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் நடிகர் விஜய் ஆண்டனி, ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

படம் குறித்து பேசிய விஜய் ஆண்டனி, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே த்ரில்லர் படங்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர்.

பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன்.

ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கரியரில் ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன்.

முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த நடிகை ரித்திகா சிங், அடுத்தடுத்த தனது படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு மீனாட்சி சவுத்ரிக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

‘கொலை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா? என்ற கேள்விக்கு, ‘கொலை’யின் உலகம் இன்னும் பல பாகங்களுடன் விரிவடைவதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன்.

எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்” என்றார்.

Comments (0)
Add Comment