மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பலாம்!

– உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி

திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.

அப்போது, “ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகுதான் எது சரி? எது தவறு? என ஆலோசனை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

அந்த உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதில்லை.

எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொணடு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார். 

Comments (0)
Add Comment