வேண்டாம் போதைப் பொருள்; விழிப்போடு இருப்போம்!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்துவைத்தார்.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை’ எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்துகொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான ‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’ எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து முழங்கினர்.

போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது.

இதனை சென்னை பெரு மாநகராட்சி ஆணையரான ராதாகிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.

கல்லூரி மாணவிகள் போதை பொருளுக்கு எதிராக பாடல்கள், சிறு நாடகம் போன்றவற்றின் மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர்.

நிகழ்வில் பங்கேற்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ” சமூகத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகரித்துவருகிறார்கள்.

உங்களுடைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால், அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்து அவர்களை இதிலிருந்து மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது.

மேலும் போதைப்பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம்.

இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்தை அனைவரும் ஒன்றிணைந்து கூறுவோம்.

‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’. போதைப் பொருளைப் பயன்படுத்தாமல்.. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வில் முழுமையாக ஈடுபட்டு சமூக நலனைக் காப்போம்” என்றார்.

Comments (0)
Add Comment