விபத்தைக் குறைக்க வந்தது புதிய விதிமுறை!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில்தான் விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகிறது.

ஆனால், இடைப்பட்ட பகுதிகளிலும் பலர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற குற்றங்களைக் கண்காணித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மிக வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது. அதிவேகமாக இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதால், விபத்துகளும் நடக்கின்றன.

அனைத்து இடங்களிலும் காவல் துறையினரை பணியமர்த்தி, அதி வேகமாக இயக்கப்படும் வாகனங்களைக் கண்காணிப்பது என்பது சவாலான காரியம்.

எனவே, பகல் நேரங்களில் மணிக்கு அதிகபட்சமாக 40 கி.மீட்டர் வேகத்திலும், இரவு நேரங்களில் 50 கி.மீட்டர் வேகத்திலும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும். வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 10 இடங்களில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், 20 இடங்களில் கண்காணிப்புக் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் முதல்முறையாக இது பொருத்தப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு, தானியங்கி கருவி மூலம் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு சலான் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து துறையில் வேக கட்டுப்பாடு ஆணை உள்ளது. அதை அடிப்படையாக கொண்டுதான். வாகனங்களை இயக்குவதற்கான வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment