ஆசிரியர் சங்கங்களின் வேலை என்ன?

குமுறும் கல்வியாளர் உமா

ஆசிரியர்கள் சங்கத்தினர்களும் ஆசிரியர்கள்தானே. அவர்கள் பள்ளிக்கு செல்வதும் கற்பித்தல் உள்ளிட்ட மற்ற செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் உமாமகேஸ்வரி.

ஒரு குறிப்பிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் எப்போதும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து ஆசிரியர்கள் குழுக்களில் பகிர்வது நடந்து வருகிறது.

பள்ளிக் கல்வி ஆணையர் இருந்த போதும் இவர்களின் இந்த செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.

இயக்குநர் வந்த பிறகும் தொடரும் என்பதில் ஐயமில்லை.

கல்வித்துறையின் ஒவ்வொரு நகர்விற்கும் தாங்கள் தான் காரணம் என்று செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு பரப்பி வரும் வேலையையும் செய்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் ஆசிரியர்கள் தரப்பிலிருந்து பணம் வசூலிக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்வதும் நடக்கிறது.

சமீபத்தில் அமைச்சர்களை அழைத்து பிரம்மாண்டமான முறையில் ‌ ஒரு விழாவை முன்னெடுத்துள்ளனர்.

கல்வியில் எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன அது குறித்து ஒரு நாளும் தங்கள் அமைப்புகளில் இணைந்திருக்கும் ஆசிரியர்களிடம் உரையாடியதாக எந்தப் பதிவுகளையும் நாம் பார்த்ததில்லை.

இவர்கள் செய்யும் பெரும்பான்மையான வேலைகள் என்பது ஆசிரியர் நலன் சார்ந்து மட்டுமே கோரிக்கைவைப்பது, குறிப்பாக ஓய்வூதியத் திட்டம் CPS என்பதை GPF ஆக மாற்றி விடுவோம் என்று ஆசிரியர்களிடம் சொல்லி சொல்லி நம்ப வைக்கும் வேலை. அது அரசின் முடிவு. செய்யும் காலம் வந்தால் செய்யப் போகின்றனர்.

எப்போதாவது ஓராசிரியர் பள்ளிகள் குறித்து இந்த சங்கங்கள் அரசை நிர்ப்பந்தித்ததா? அதை நோக்கி அரசை சிந்திக்க வைத்திருந்தால் உண்மையாகவே மாணவர்கள் நலன் சார்ந்தும் இயங்குகின்றன எனப் பாராட்டலாம்.

பற்றாக்குறை ஆசிரியர்கள் , கழிப்பறைச் பிரச்சினைகள், கட்டிடத் தேவைகள், பாடச்சுமை, பாடத்திட்ட மாறுதல், மனநல ஆலோசகர் நியமனம்… இப்படி நீளும் தேவைகள் குறித்து ஆரோக்கியமான விவாதத்தை ஆசிரியர்கள் மத்தியில் முன்னெடுத்துள்ளதா இது போன்ற சங்கங்கள்?

கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள 25% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை, நம் எதிர்கால ஆசிரியர் பணியிடங்களைக் கேள்விக்குறியாக்கியதை என்றாவது விவாதித்து இருக்கிறார்களா இந்த சங்க நிர்வாகிகள்?

எந்த ஆணியும் பிடுங்காத போது இவர்களெல்லாம் பள்ளிக்குள் இருந்து பாடம் நடத்தும் வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் மாணவர்களுக்காவது பிரயோஜனமாக இருக்கும்.

வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை என்று சமூகத்தின் வாயில் விழும் ஆசிரியர்கள் இதுபோன்ற சங்கங்களில் தஞ்சமடைந்த சுயநலமிகளே.

எத்தனையோ ஆசிரியர் சங்கங்கள் உண்மையாக தங்கள் கோரிக்கைகளை வைத்து அரசிடம் நியாயமான முறையில் பேசிவருகின்றன.

அந்தக் கோரிக்கைகள் அரசாலும் /கல்வித்துறையாலும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவரவர் பணிகளைச் செய்துவருகின்றனர்.

ஆனால் எந்த அறிவிப்பு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட சங்கத்தைச் சேர்ந்த தலைமையால் மட்டுமே கல்வித்துறை ஆணையர் செய்தார் என்று கடந்தகாலங்களில் செய்தி வெளியிடுவதும் தற்போது இயக்குநர் இவர் பேச்சைக் கேட்பதும் என்று செய்தி வருவது கல்வித்துறைக்கு இழுக்கு.

கல்வித்துறைக்கும் பொறுப்பிருக்கிறது அல்லவா? இயக்குநர் உள்ளிட்ட அங்குள்ள உயர் அதிகாரிகளும் முடிவு செய்துதானே சுற்றறிக்கைகள் வெளிவருகின்றன.

இடையில் இவர்களைப் போன்ற இடைச்செருகல்கள் எதற்கு? யார் தலையிட்டாலும் அரசின் கொள்கை நிலைப்பாடு என்று ஒன்றிருக்கிறது. கல்வித்துறையின் பணிகள் தானாக நடைபெறும்.

அவற்றை விடுத்து பள்ளி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் கல்வித்துறையின் பணிகளின் போக்கைக் கட்டுப்படுத்துவது போல படம் காட்டும் விளம்பரப் பிரியர்களை கல்வித் துறை கண்டிக்கவேண்டும்.

இவர்களின் இந்தப் போக்கைக் கண்டு மனதால் வருந்தும் உண்மையான சங்கத் தலைமைகள் , களப் போராளிகள், சங்க உறுப்பினர்கள் ஒருபுறம். ஆசிரியர்கள் சங்கங்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அதைக் கறைப்படுத்தும் வேலைகளை இது போன்ற சங்கங்கள் செய்துவருகின்றன.

வரும் கல்வியாண்டிலாவது இதுபோன்ற சங்கங்கள் களைகளாகக் கருதி , அவற்றைப் பிடுங்கிட வேண்டும் கல்வித்துறை.

உரிமைகளுக்காகப் போராடும் அதே வேளையில் கடமைகளை சரிவர செய்யும் சங்கங்களாக மட்டும் இயங்க வேண்டும் என்று எச்சரிக்கை தர வேண்டும்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக்கல்வி அதிகாரிகள் இவர்களின் பணிக்கு இடையூறு இல்லாமல் சக ஆசிரியர்களைப் போல பணியாற்ற அறிவுறுத்த வேண்டும்.

அப்போதுதான் உண்மையான கல்வியை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் கல்வித்துறையாக விளங்க முடியும் என்று லட்சக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், நேர்மையாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், சார்பாக கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்று பேஸ்புக்கில் எழுதிய பதிவில் கல்வியாளர் உமா மகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment