மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ஹிஜாப் விவகாரம்!

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகாவில் அப்போது இருந்த பாஜக தலைமையிலான அரசு கல்வி நிலையங்களில் சீருடை கட்டாயம் என்றும் ஹிஜாப் அணிய விதிவிலக்கு அளிக்க முடியாது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் உத்தரவு பிறப்பித்தது.

பாஜக அரசின் அறிவிப்பு கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.

தற்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில், கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தமிழ்நாட்டிலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் ஜன்னத். இவர் இரவு பணியில் ஹிஜாப் அணிந்துவிட்டு இருந்துள்ளார்.

அப்போது, திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர் அங்கு சென்றார்.

அப்போது, அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும், மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா என்று கேள்வி எழுப்பி அதனை தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்.

அப்போது பெண் மருத்துவர் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல என அவர் வீடியோ பதிவு செய்வதை மருத்துவர் தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மருத்துவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் திருப்பூண்டியில் போராட்டம் நடத்தியதையடுத்து கீழையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மருத்துவமனையில் மருத்துவருக்கு எதிராக பாஜக நிர்வாகி கேள்வி எழுப்பிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments (0)
Add Comment