தீராக் காதல்: இதமான காதல் அனுபவத்தைத் தரும்!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்.

இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் அம்ஜத், “இந்த வாய்ப்பினை அளித்த ரோகினுக்கு நன்றி. படத்தின் முழுக்கதைப் பற்றி எனக்குத் தெரியாது.

என்னுடைய பகுதி மட்டும்தான் எனக்குத் தெரியும், ஒட்டு மொத்த கதையும் அதற்குப் பின்னர் தான் தெரியும், என்னுடைய கதாபாத்திரம், தனித்துவமாக இருக்கும்.

படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்று சுருக்குமாக முடித்துக்கொண்டார்.

நடிகை ஷிவதா, “ஐஸ்வர்யா அடுத்தடுத்து வித்தியாசம் வித்தியாசமாகப் படம் நடித்துக் கலக்கி வருகிறார். அவர் என் நடிப்பு பிடித்திருக்கிறது என்று சொன்னது பெருமை. ஜெய் கலாய்த்துக்கொண்டே இருப்பார்.

நிறைய உறுதுணையாக இருந்தார். ஒளிப்பதிவாளர் என்னை அழகாகக் காட்டியுள்ளார்.

சுரேந்தர் சாரிடம் இது யாருடைய கதை எனக் கேட்டேன். சிரித்தார். இந்தப் படம் எல்லோருக்கும் ஈஸியாக கனக்ட் ஆகும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும், இரண்டு வருடக் கதை உண்டு.

நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ணவேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு, லைக்கா நிறுவன தமிழ்குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார். அது ஒரு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது.

இந்தப் படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை.

அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள். ஒட்டு மொத்த படக்குழுவினரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார்கள்” என்றார்.

நடிகர் ஜெய் பேசும்போது, “அதே கண்கள் படத்தை 4 முறை பார்த்துள்ளேன். இந்த மாதிரி இயக்குநரிடம் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன்.

அது நடந்தது சந்தோஷம். ஒளிப்பதிவாளர் ரவி என்னை இந்தப் படத்தில் அழகாகக் காண்பித்துள்ளார்.

பாடல்களும், இசையும் அருமையாக வந்துள்ளது. சித்துவின் ரசிகன் நான். ரோகின் ஒரு மிகப்பெரும் புத்திசாலி அவருடைய பணி தனித்துவமாக இருக்கும்.

படத்தில் இரண்டு நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். ஐஸ்வர்யாவின் பெரும் ரசிகன். தயாரிப்பாளர் லைக்கா தமிழ்குமரனுக்கு நன்றி” என்றார்.

இயக்குநர் ரோகின் வெங்கடேசன், “ஆசைப்பட்ட வாழ்க்கை ஆசைப்பட்ட பொருள் ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காம போறதுதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம்.

பாலகுமாரன் சார் வார்த்தை, எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். இது என்னோட இரண்டாவது படமா வந்திருக்கவேண்டியது.

சுரேந்திரன் சார் நிறையக் காதல் கதைகளை எழுதியிருக்கிறார். இந்தக் கதை ஒரு அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.

Comments (0)
Add Comment