அனைவருக்கும் பிடித்தமான கதையாக இருக்கும்!

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

படத்தைப் பற்றி நடிகை வரலட்சுமி பேசும்போது, “இயக்குநர் தயாள் ‘கொன்றால் பாவம்’ படத்தில் மூலம் தான் எத்தகைய இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார்.

ஒரு சிறிய படமாக இருந்தாலும், அதில் கதை என்பது இருக்கும். இந்தப் படத்திலும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படியான கதை இருக்கும்.

ஏன் இந்தப் படத்தை பார்க்கிறோம் என்று ஒரு இடத்தில்கூட நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.

த்ரில்லர் கதையான இதை எப்படி திரைக்கதையாக உருவாக்கி படமாக எடுக்கப் போகிறார்கள் என்ற ஆச்சரியம்தான் எங்களுக்கு இருந்தது. ஆனால், அதையெல்லாம் மிகச் சரியாக எடுத்து இருக்கிறார்கள்.

எங்கள் படத்தில் பெரிதாக சர்ச்சை என்பது இல்லை. இப்பொழுது எல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை வைத்து விடுகிறார்கள்.

ஆனால், எங்கள் படத்தில் கதை மட்டும் தான் உள்ளது என்பதால் ஊடக நண்பர்கள் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என்றார்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது, “நேற்றுதான் ‘கொன்றால் பாவம்’ படத்திற்காக உங்கள் அனைவரையும் சந்தித்தது போல உள்ளது. இவ்வளவு சீக்கிரத்தில் மீண்டும் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.

குழந்தைகளுக்கு எல்லாம் எப்போது பள்ளி விடுமுறை முடியும், நண்பர்களை சந்திப்போம் என்ற ஏக்கம் இருக்கும். அதுபோலதான் எனக்கு இந்த டீமும்.

எங்களுக்குள் இருந்த நட்பு மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. நண்பர்களாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த அதே சமயத்தில் வேலையும் செய்தோம்” என்றார்.

நடிகர் ஆரவ், “கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இந்த வாய்ப்பு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக வந்தது.

தயாள் சார் என்னிடம் கதை சொன்னதும், ‘எப்பொழுது ஷூட்டிங்?’ என்று கேட்டேன். ‘அடுத்த வாரம்’ என்றார். 25 நாட்களில் படப்பிடிப்பு முடித்து விடுவோம் என்று சொல்லி 21 நாட்களிலேயே முடித்திருக்கிறார். நீங்கள் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

Comments (0)
Add Comment