கரையைக் கடந்த மோக்கா புயல்: பாதிக்கப்பட்ட வங்கதேசம்!

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல், வங்காளதேசம், மியான்மர் இடையே 200 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.

இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பெரிய பாதிப்புக்குள்ளாக்கியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோரப் பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக மோக்கா புயல் காரணமாக இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. அதோடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

Comments (0)
Add Comment