சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்!

அகற்றாதோர் மீது நடவடிக்கை

சென்னையில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை அகற்றிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றவும் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

அதன்படி கடந்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில், 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் 563 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 1,366 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 1,929 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.  

இதனிடையே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்றும் அவ்வாறு அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் சென்னை மாநகராட்சியால் அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment