மோக்கா புயல்: 6 துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை!

வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள ‘மோக்கா’ புயல் இன்று (மே-12) அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது.

தொடர்ந்து, வரும் 14-ம் தேதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரையைக் கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கரையைக் கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் புயல் உருவானதை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் எச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் சென்னை எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment