ரத்த சோகையைத் தடுக்கும் கறிவேப்பிலைக் குழம்பு!

கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.

இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

விழுதாக அரைக்க:

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை – ஒரு கிண்ணம்.

குழம்புக்கு:

நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5, பூண்டுப் பல் – 4, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும். புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துகொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும்.

இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து போட்டு தாளித்த பின்னர் உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். அடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும்.

இப்போது சுவையான கறிவேப்பிலை சின்ன வெங்காயம் குழம்பு ரெடி. சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும். 

 நன்றி: மாலை மலர் 

Comments (0)
Add Comment