அறம் இல்லாதவர்களிடம் கருணையை எதிர்பார்க்கும் சமூகம்!

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையை பல்வேறு துறைகளைச் சார்ந்த 30 பேர் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ‘சமூக விரோதி ‘என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே தனது முதல் படமாக ‘பொது நலன் கருதி’ படத்தினை கந்து வட்டி கலாசாரத்திற்கு எதிராக எடுத்து பாராட்டப்பட்டவர்.

இந்த ‘சமூக விரோதி’ படத்தில் பிரஜின், நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், வழக்கு எண் முத்துராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைப்பட நடிகர்கள் விஜய் சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கலையரசன், இயக்குநர் மோகன் ஜி, அரசியல் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன், நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி போன்று பல்வேறு ஆளுமைகள் 30 பேர் இந்தப் படத்தின் டைட்டில் லுக்கைத் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

‘சமூக விரோதி’ டைட்டில் லுக், வெளியான நிமிடத்தில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் சீயோன் ராஜா, “ஒரே அலைவரிசை எண்ணம் கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியால் சீயோனா ஃபிலிம் ஃபேக்டரி என்கிற நிறுவனம் உருவாகியுள்ளது.

இந்நிறுவனத்தின் சார்பில், என் இயக்கத்தில் இரண்டாவது படமாக ‘சமூக விரோதி ‘படம் தயாராகியுள்ளது.

“புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம்” என்கிற சிந்தனை முழக்கத்தோடு இந்தப் படத்தின் தலைப்பை வைத்துள்ளோம்.

அறமே இல்லாத மனிதர்களிடம் இந்தச் சமூகம் கருணையை எதிர்பார்க்கிறது, மூலை சளவை செய்பவனிடம் முன்னேற வழி கேட்கிறது. இதுதான் இந்த தலைமுறை முரண்.

கருத்தியல் ரீதியாக நான் வைத்திருக்கும் விவாதத்திற்கு சமூகம் செவி சாய்க்கும் என்றே நம்புகிறோம்” என்றார்.

Comments (0)
Add Comment