தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி!

– உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் உரிய முறையில் மனு அளித்தும் அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ். கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசுக்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டது.

அதன் பிறகும் ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த தனி நீதிபதி, சுற்றுச் சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினர். அப்போது தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை திறந்தவெளியில் நடத்த காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 27-ம் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. இதனால் விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments (0)
Add Comment