பிரதமரின் சென்னை வருகையும் எதிர்ப்பும்!

சென்னை விமான நிலையத்தில் 1260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.

பிற்பகல் 2.45 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு புதிய முனையத்தை திறந்து வைக்கிறார்.

மாலை 4 மணி அளவில் சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் சேவை, 294 கோடியில் திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம் பள்ளி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார்.

பின்னர் விவேகானந்தர் இல்லம் செல்லும் பிரதமர், ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

இதையடுத்து பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

விழா முடிந்ததும், மைசூர் செல்லும் பிரதமர், நாளை காலை தெப்பக்காடு முதுமலை யானைகள் காப்பகத்துக்கு சென்று, ஆஸ்கர் விருது வென்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்பட தம்பதியை சந்திக்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதால் 26 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இது குறித்து சட்டமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தியின் பதவியை இழக்கச் செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment