சிக்கிம் பனிச்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!

சிக்கிம் மாநிலம் நாது லா மலைப்பாதையில் ஜவஹர்லால் நேரு சாலை இணைப்பு பகுதியான காங்டாக்கில் நேற்று பிற்பகல் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டபோது அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 4,310 மீட்டர் உயரத்தில், சீன எல்லையில் அமைந்துள்ள நாதுலா கணவாயானது முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. பனிச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பனிச்சரிவு காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் பனியின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 14 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளை சிக்கிம் காவல்துறை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே இந்த விபத்து குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, மண்வெட்டி கொண்டு பனியை அகற்றும் பணியில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Comments (0)
Add Comment