மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசம் – சுந்தர ராமசாமி!

பரண் :

“உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக, மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும்.

கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம் கொள்கிறது? அதன் தன்மை அது. ஆயாசம் எதுவுமில்லை.

இதேபோல் நம் கவனங்கள் நம் தன்மையாக மாற வேண்டும். இதில் தான் நான் அமிழ விரும்புகிறேன். என் பேச்சு இப்போது என்னை அறியாமலேயே மட்டுப்பட்டு வருகிறது. அர்த்தம் ஊடுருவும்போது அளவு குறைந்துவிடுகிறது போலும்.

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாகப் புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனத்தில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்?

அதனால்தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான்.. குரல் தன்னுடன் பேசுவதைப்போல் அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது”

– சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலிலிருந்து ஒரு பகுதி.

நன்றி : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

Comments (0)
Add Comment