நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஏப்ரல்-3 வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12-வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோன்று, மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் மாநிலங்களவை கூடியது. அப்போது அதானி விவகாரம் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இதில், வனப் பாதுகாப்பு திருத்த மசோதா – 2023 பற்றிய கூட்டுக் குழுவுக்கான நியமனம் பற்றிய தீர்மானம் அவையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் சார்பில், உறுப்பினர்களை நியமிப்பது பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், குரல் வாக்கெடுப்பு வழியே அது நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழலில், உறுப்பினர்கள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், அவை தலைவர் ஜெகதீப் தன்கர் அவையை மீண்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதன்படி வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 3) காலை 11 மணி வரை  மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக உறுப்பினர்களின் அமளியால் மக்களவையும் ஏப்ரல் 3-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Comments (0)
Add Comment