எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா தமிழக பட்ஜெட்?

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம் வாங்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீடு. அயோத்தி தாசர் பண்டிதர் பெயரில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைக்க ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

வடசென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2.20 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு. மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் அதிகரிப்பு. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு .

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வெள்ளத்தடுப்பு பணியை மேற்கொள்ள ரூ.434 கோடி நிதி ஒதுக்கீடு. கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு.

217 செயற்கை பவள பாறைகள் அமைக்கப்படும். கடல் அரிப்பு, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடியில் நெய்தல் மீட்பு இயக்கம். மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி வட்டாரத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும். 10,000 கிலோமீட்டர் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.

தெருநாய்கள் இனவிருத்தி கட்டுப்பாட்டிற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சட்டசபை நிகழ்ச்சிக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இறுதியில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21-ம் தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பட்ஜெட் மீதான விவாதம் 23,24,27,28-ம் தேதிகளில் நடைபெறும். காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெறும்.

Comments (0)
Add Comment