கஞ்சா ஒழிப்பு வேட்டையில் இதுவரை 20,000 பேர் கைது!

– டிஜிபி சைலேந்திரபாபு

தென்காசியில் புதிய காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி நிறைவடைந்ததையொட்டி, தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அந்த பணிகளை பார்வையிட்டார்.   

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, ”போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் திட்டம். தற்போது கஞ்சா வேட்டை என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் 80 சதவீதம் கஞ்சா நடமாட்டம் குறைந்துள்ளது.  .

தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை ஆகிய கேரள மாநில எல்லைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். கூடுதலாக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு அவசியம் கருதி மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று கருதினால் உடனடியாக காவல்துறையினர் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவர்களில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். சுமார் 750 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் இல்லாத பகுதி என பல காவல் நிலையங்கள் அறிவித்துள்ளன. அடுத்தகட்டமாக போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டங்கள் என அறிவிக்க உள்ளனர்.

போதைக்கு அடிமையான பலர் போதைப்பொருட்கள் கிடைக்காததால் அதற்கு பதிலாக மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்று தகவல் வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத் துறை ஆகியவை இணைந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுக் கூறினார்.

Comments (0)
Add Comment