ஒரு வார்த்தையை வைத்து வழக்கு முடியும் கதை ‘டி 3’!

நடிகர் பிரஜின் நடிப்பில் ‘D 3’ என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார்.

மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகும் ‘மேன்’ படத்தின் ஒளிப்பதிவாளர்.  நாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகவுள்ளது.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் பாலாஜி, “எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வான் என்பது பிரபஞ்ச உண்மை.

அப்படி இந்தப் படத்தின் கதையில் குற்ற நிகழ்வு நடந்த இடத்தில் குற்றவாளி ஒருவன் ஒரு வார்த்தையை மட்டும் விட்டுச் செல்கிறான்.

அதன் நுனி தேடி, காவல்துறை மோப்பம் பிடித்துத் தொடர்ந்து குற்றத்தின் காலடித் தடயம் அறிந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்கை முடிப்பது தான் கதை. இப்படம் ஒரு தொடர் படைப்புரீதியில் உருவாகியுள்ளது.

D3 படப்பிடிப்பு பல்வேறு கட்ட சோதனைகளையும் தடைகளையும் தாண்டி நடைபெற்றுள்ளது.

படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சிகள் தொடங்கிய அன்று நாயகன் பிரஜின் ஓட்டிய கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த படம் பெரும்பாலும் கோவிட் காலத்தில் படமாக்கப்பட்டது. அப்போது படக்குழுவைச் சேர்ந்த 10 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. அதையும் தாண்டித்தான் படம் உருவாகியிருக்கிறது” என்கிறார்.

கண்ணில் கனவைச் சுமந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் கூட்டு உழைப்பினால் இந்தப் படம் உருவாகியுள்ளது.

Comments (0)
Add Comment