தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நாடாளுமன்றம் இன்று கூடியதும் அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவை நடவடிக்கை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி செல்கின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேரணியையடுத்து நாடாளுமன்ற சாலை முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment