அரசுப் பேருந்துகளில் உள்ள குறைகளைத் தெரிவிக்க புகார் எண்!

அரசு போக்குவரத்துக் கழக பயணிகளுக்கான உதவி எண் மற்றும் ‘அரசு பஸ்’ என்னும் இணையதளத்தை போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கும் வகையில் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ள 1800 599 1500 என்ற இலவச எண்ணை அமைச்சர் அறிமுகம் செய்தார்.

இதில் பெறப்படும் புகார்கள், குறைகளுக்கு அடையாள எண் ஒதுக்கப்பட்டு, அது தொடர்பான குறுஞ்செய்தி பயணிகளுக்கு அனுப்பப்படும்.

இந்த புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் உடனுக்குடன் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தீர்வு காணப்பட்ட விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். அதேபோல், மாற்றுத் திறனாளிகள் ‘ஒகே கூகுள்’ வழியாக இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, போக்குவரத்து கழகங்களுக்கான www.arasubus.tn.gov.in எனும் பொது இணையதள வசதியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் போக்குவரத்து கழகங்களின் அமைப்பு, அவற்றின் பயணிகள் சார்ந்த சேவைகள், பேருந்து வருகை நேரம், முன்பதிவு, தொடர்பு எண்கள், பயணிகள் தங்கள் குறைகளைத் தெரிவித்தல், பயணம் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், போக்குவரத்துக் கழகங்களில் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும் போது அதன் வழித்தட விவரங்கள், நேர அட்டவணை, கட்டண விவரம் குறித்த தகவல்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளத்தில் வழங்கப்பட இருக்கிறது. ஆங்கிலம், தமிழில் தகவல்களை பெறும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், வரும் காலங்களில் இந்த இணையதள வசதிகளை கைபேசி செயலியில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Comments (0)
Add Comment