பரபர திரில்லராக உருவாகியுள்ள பருந்தாகுது ஊர்க் குருவி!

இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக் கூட்டம் பாடல் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டது.

கேபிஆர் கல்லூரி விழாவில் 6 ஆயிரம் மாணவர்கள் மத்தியில், மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால் பருந்தாகுது ஊர் குருவி படத்தின் முதல் லிரிகல் பாடலான ‘மதயானைக்கூட்டம்’ பாடல் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மதயானைக்கூட்டம் பாடல் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி இசையில் அவரும் ராகுல் நம்பியாரும் இணைந்து பாடியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் விதாகர் எழுதியுள்ளார்.

இணையம் முழுக்க வைரலாகி வரும் இப்பாடல் யூடூயுப் தளத்தில் பெரும் பார்வை எண்ணிக்கைகளைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனைத் தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை.

அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாகப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையைப் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ளது “பருந்தாகுது ஊர்க் குருவி” படம்.

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

Comments (0)
Add Comment