அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்!

 எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 11ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமானது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தொடருவார் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி எடப்பாடிஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதனால், இனி ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கட்சி பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Comments (0)
Add Comment