பிபிசி அலுவலகங்களில் தொடரும் வருமான வரி சோதனை!

பிரிட்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி சோதனையை தொடங்கினர்.

இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரான்ஸ்பர் பிரைசிங்’ விதிமுறையை பிபிசி இந்தியா மீறியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டபோதும் உரிய பதில் அளிக்காததால் இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 2012-ம்ஆண்டு முதல் கணக்கு வழக்குகள், நிதி பரிவர்த்தனைகளை ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இரவு பகலாக கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

இதனால் பிபிசியின் டெல்லி அலுவலகத்தைச் சேர்ந்த 10 உயரதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே உள்ளனர்.

இந்த சோதனையின்போது, கணக்கு வழக்கு தொடர்பாக கணினிகளில் இருந்த தகவல்கள் மற்றும் கோப்புகளில் இருந்த ஆவணங்களை ஐ.டி.அதிகாரிகள் நகல் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. அதில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிபிசி அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment