கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது!

– உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

“தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இதனை குலதெய்வ கோவிலாகக் கொண்டுள்ள நாங்கள் வழிவழியாக வழிபட்டு வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு பிரிவினர் இந்தக் கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் அந்தக் கோவிலை உரிமை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

எனவே இந்த வருடம் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், “கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்.

அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Comments (0)
Add Comment